2020: பறவை ஆர்வலர்களுக்கான புத்தாண்டுத் தீர்மானங்கள்

புத்தாண்டு என்றாலே அவரவர் விருப்பங்களுக்கு ஏற்றவாறு சிறிதும் பெரிதுமாகப் பல்வேறு தீர்மானங்களை எடுப்போம். சுற்றுசூழல் ஆர்வலர்கள் மட்டுமின்றி, இயற்கை மீது காதல் விலகாத பலரும் ஒன்றுபடும் ஒரு அம்சம், பறவை நோக்குதல். பறவை நோக்குதலிலும் வல்வேறு சவால்கள் உண்டு, அவற்றைப் புதிய தீர்மானங்களாக எடுத்துக்கொண்டு இந்த ஆண்டில் அவற்றைச் சந்திக்க நாம் தயாராகலாம்.

தீர்மானம் 1: நம் வீட்டுப் பறவைப் பட்டியல்

நம்மை அடிக்கடி சந்திக்கும் நண்பர்கள், உறவினர்களை நினைவில் வைத்திருப்பது போல பறவை இனங்களையும் நினைவில் வைக்கப் பழகலாம். புத்தாண்டு முதல் காகம், குருவி ஆகியவற்றைத் தாண்டி, நம் வீட்டுக்கு வந்து செல்லும் பறவை இனங்களின் பெயரையும் எண்ணிக்கையையும் பட்டியலிடலாம். அவற்றில் நமக்குப் பிடித்த பறவைகளைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள முயலலாம். இதையே பணியிடத்திலும் பள்ளி, கல்லூரியிலும் கூடச் செய்ய முடியும். தொடர்ச்சியாக பறவைகளை நோக்க ஆரம்பிக்கும்போது, வெளிநாடு மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வலசை வரும் புதிய வகைப் பறவைகளையும் பார்க்கும் வாய்ப்பு நிறையவே உள்ளது!

BRSH by JJ Harrison
வலசை வரும் பழுப்புக் கீச்சான் Brown Shrike. படம்: ஜெ.ஜெ.ஹாரிசன்/விக்கிமீடியா

தீர்மானம் 2: தண்ணீர் வைத்தல்

பறவைகள் மீது பாசமும் அக்கறையும் உள்ள பெரும்பாலானோர் வீட்டில் அவற்றுக்குத் தண்ணீரும் உணவும் வைப்பது வழக்கம். இப்படி வைக்கும் போது தண்ணீரை பிளாஸ்டிக் கப் அல்லது வேறு பாத்திரங்களில் வைக்க வேண்டாம். இதில் வைக்கப்படும் நீர் வெயிலில் சூடாகி விடும். அதனால் மண் சட்டியில் நீரை வைப்பதே மிகவும் நல்லது.

கூடுதலாக இதில் ஒரு சவால் உள்ளது. பொதுவாக சட்டியில் ஆனந்தக் குளியல் போட்டு, உணவை நனைத்துச் சாப்பிட்டு, நீர் அருந்திவிட்டுத் தான் பறவைகள் செல்லும். இதனால் சட்டி அழுக்கடையும். குறைந்தது இரண்டு நாட்களுக்கு ஒரு முறையாவது சட்டியை சுத்தம் செய்ய வேண்டும். இதைத் தொடர்ச்சியாக செய்வது தான் சவாலே! சில நேரம் நீர் ஊற்றிய அடுத்த நாளே முழுவதும் அழுக்காகி இருக்கும். “நேத்து தான டீ சுத்தம் பண்ணேன். அதுக்குள்ள இப்படி அடையாளம் தெரியாத அளவுக்கு ஆட்டம் போட்டு வெச்சிருக்கீங்க,” என்று சுத்தம் செய்யும் போது வீட்டிற்கு வரும் காகங்களை அம்மா அன்பாகக் கடிந்துகொள்வார்.

குறிப்பு: உங்கள் வீட்டிலோ வீட்டின் அருகிலோ பூனைகள் இருந்தால் பறவைகளுக்கு உணவும் நீரும் வைப்பதைத் தவிர்க்கவும். உணவுக்காகவும் நீருக்காகவும் வரும் பறவைகளை பூனைகள் வேட்டையாடும் ஆபத்து உள்ளது என்பதே காரணம்.

தீர்மானம் 3: புத்தக வாசிப்பு

இந்த ஆண்டில் இயற்கை/பறவைகள்/சுற்றுச்சூழல் சார்ந்து குறைந்தபட்சம் ஒரு புத்தகமாவது வாசிக்க வேண்டும் என்பதே மிகவும் முக்கியமானத் தீர்மானம். இன்றைக்கு வாசிப்பு வெகு வேகமாகக் குறைந்து வருகிறது. பலரும் நகரும் காட்சிகள், துணுக்குச் செய்திகளையே விரும்ப ஆரம்பித்துவிட்டோம். ஆனால், இவை நம் கற்பனை வளத்தையோ சிந்தனையையோ அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவதில்லை. அதனால் வாசிப்பு மிகவும் அவசியமாகிறது. குறிப்பாக, இயற்கை குறித்த பதிவுகளாக வரும் எழுத்தை வாசிப்பது நமது அனுபவத்தை பன்மடங்கு மேம்படுத்துகிறது. இயற்கை குறித்த நமது அறிவை இது விரிவடையச் செய்வதோடு மட்டுமல்லாமல் சுற்றுச்சூழல் சார்ந்த புரிதலையும் ஆழமாக்க உதவுகிறது. அத்துடன், புத்தகம் வாசிக்கும் பெரியவர்களைப் பார்த்து குழந்தைகளும் வாசிக்கத் தொடங்குவார்கள்.

BBT 1
தமிழில் சில பறவைப் புத்தகங்கள். பட உதவி: பின்ட்ரெஸ்ட்

தீர்மானம் 4: மக்கள் விஞ்ஞானி

சரி, இப்படிப் பல்வேறு வகைகளில் பறவை நோக்குதலில் ஈடுபட்டு, எழுதிச் சேகரித்துள்ள தகவல்களை என்ன செய்வது? இது பறவைகளுக்கு எப்படிப் பயனளிக்கும்? சந்தேகமே வேண்டாம்! இவை பறவைகள் பாதுகாப்பில் முக்கியப்பங்கு வகிக்கும். நம்மிடம் உள்ள தகவல்களை eBird என்ற சர்வதேச தகவல் சேகரிப்பு வலைத்தளத்தில் உள்ளீடு செய்வதன் மூலம், பறவைகள் சார்ந்த அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு நாமும் கைகொடுக்கலாம்.

eBird India
eBird India (www.ebird.org/india)

வாரத்துக்கு ஒரு முறை அல்லது மாதம் நான்கு முறையாவது இது போன்ற தகவல்களை eBirdல் உள்ளீடு செய்வது நம் அனுபவத்தை மேம்படுத்துவது மட்டுமில்லாமல், குறிப்பிட்டு ஒரு விஷயம் சார்ந்து ஏற்படும் மாற்றத்தைக் கண்காணிக்கவும் உதவும். eBirdல் ஒரு புதிய கணக்கை எவ்வாறு தொடங்குவது, அத்துடன் தேசிய அளவிலான மாதாந்திரப் பறவைக் கணக்கெடுப்புப் போட்டிகள் போன்றவைக் குறித்த தகவல்களுக்கு இங்கே சொடுக்கவும். பறவைகள் பாதுகாப்பில் அறிவியல் ஆராய்ச்சி மேற்கொள்ளும் விஞ்ஞானிகளுக்கு இப்படி உதவும் போது, நாமும் மக்கள் விஞ்ஞானி ஆகிவிடுகிறோம்.

தீர்மானம் 5: விழிப்புணர்வை விரிவாக்குவோம் 

இப்படிப் பல்வேறு வகைகளில் அனுபவம் பெற்ற பிறகு பள்ளி, கல்லூரிகளில் பறவைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்சிகளை நாமே நடத்தத் தொடங்கலாம். எனக்குத் தெரிந்த சில ஆர்வலர்கள் சில மாவட்டங்களில் தொடர்ச்சியாக செய்து வருகின்றனர். குறிப்பாக கல்லூரி மாணவர்களை அதிக அளவில் சென்றடைய வேண்டிய தேவை உள்ளது. எனவே இந்த ஆண்டு குறைந்தபட்சம் ஆறு பள்ளி/கல்லூரிகளில் பறவை நோக்குதலை அறிமுகப்படுத்துவோம். பறவை நோக்குதலைப் பொறுத்தவரை நெடிய அனுபவம் இருந்தால் தான் விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என்றில்லை. ஆர்வம் மட்டுமே அடிப்படை. இது போன்ற கூட்டங்களில் தொடக்கத்தில் பேசத் தயங்குபவர்கள், கூட்டங்களை ஏற்பாடு செய்வதற்கான ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொள்ளலாம்.

Feb 15 7 arts
சேலம் அரசு கலைக்கல்லூரியில் நடந்த பறவைகள் விழிப்புணர்வுக் கூட்டம்

தீர்மானம் 6: பறவை ஒலிப்பதிவாளர்

இருநோக்கியும் (பைனாகுலர்) கேமராவும் இல்லாததால் பறவை நோக்குதலை எப்படித் தொடங்குவது என்ற சந்தேகம் பலரிடம் உள்ளது. பறவை நோக்குதலுக்கு தேவைப்படும் ஒரேயொரு தகுதி நம் ஆர்வம் மட்டுமே. வெறும் கண்களால் பறவைகளைப் பார்க்கத் தொடங்கலாம். அடுத்ததாக, இன்று பலரிடமும் ஸ்மார்ட் ஃபோன்கள் உள்ளது. அதில் ஒரு ‘வாய்ஸ் ரெக்கார்டர்’ இருக்கும் அல்லது ஒரு செயலியைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதனைப் பயன்படுத்தி நாம் பார்க்கும் பறவைகளின் இனிமையான பாடல்களையும் ஒலிகளையும் பதிவு செய்ய முடியும். இப்படிச் செய்வதால் அந்தப் பதிவுகளை மீண்டும் கேட்டு மகிழ முடியும், அத்துடன் அவை முக்கிய ஆவணமாகவும் மாறும். அப்பறவைகளின் பெயர்களை எளிதில் கண்டு பிடிக்கவும் இந்தப் பதிவு உதவும்.

.WAV by Macaulay
கைபேசி மூலம் பறவை ஒலிகளை பதிவு செய்தல். பட உதவி: மெக்காலே/கார்னெல் லேப்

அத்துடன் நின்றுவிடாமல் நாம் பதிவு செய்து வைத்துள்ள ஒலிகளை eBird India, Xeno Canto போன்ற முறையானத் தளங்களில் பதிவேற்றம் செய்வது நம் முயற்சியைப் பயனுள்ளதாக்கும். இதை MP3 வடிவத்தில் செய்வதை விட .WAV வடிவில் பதிவேற்றம் செய்வது உகந்தது. மேலும் கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு இங்கே சொடுக்கவும். அனுபவமிக்கப் பறவை ஆர்வலர்களுக்கும் இது ஒரு சுவாரசியமான சவால்.

அதே போல அனுபவமிக்க பறவை ஆர்வலர்களும் ஒளிப்படக் கலைஞர்களும் தாங்கள் எடுத்துள்ள பறவைப் படங்களை கணியியில் மட்டுமே வைத்திருக்காமல் விக்கிமீடியா காமன்ஸ், eBird போன்ற பொதுத் தளங்களில் உள்ளீடு செய்தால் அனைவருக்கும் பயனளிக்கும்.

தீர்மானம் 7: தமிழகப் பறவை ஆர்வலர்கள் சந்திப்பு

சரணாலயங்களில் ஆயிரக்கணக்கில் பறவைகள் ஒன்று கூடுவது போல ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் மாநிலம் முழுவதுமிருந்து நூற்றுக்கணக்கான பறவை ஆர்வலர்கள், ஒளிப்படக் கலைஞர்கள், விஞ்ஞானிகள் என பறவைகள் மீது காதல் கொண்ட அனைவரும் தமிழகப் பறவை ஆர்வலர்கள் சந்திப்பில் ஒன்றுகூடி வருகிறார்கள். இரண்டு நாட்களுக்கு நடைபெறும் இந்த மாபெரும் சந்திப்பானது இது வரை ஆறு முறை நிகழ்ந்துள்ளது. இந்நிகழ்வில் கற்றுக்கொள்ள எண்ணற்ற விஷயங்கள் இருக்கும். வருகின்ற ஆண்டில் இறுதியாக இந்தச் சந்திப்பிலும் கலந்துகொள்ள வேண்டும் என்ற தீர்மானத்தை எடுத்து உங்கள் குடும்பத்துடன் வந்து கலந்து கொள்ளலாம்.

6வது தமிழகப் பறவை ஆர்வலர்கள் சந்திப்பின் நிகழ்ச்சி நிரல் கீழே:

தீர்மானம் 8: 12 புதிய பறவைகள்

புதிய ஆண்டில் இது வரை நாம் நேரில் பார்க்காத 12 புதிய பறவை இனங்களைப் பார்க்க வேண்டும் என்ற தீர்மானம்/சவாலை நாம் எடுத்துக்கொள்ளலாம். தமிழகத்தில் மட்டும் 500க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் புதிதாகப் பன்னிரண்டுப் பறவைகளை அடையாளம் கண்டு மகிழ்வது நிச்சயம் கடினமல்ல.

மேற்கண்ட தீர்மானங்களில் உங்களால் இயன்ற அனைத்தையும் எடுத்துக்கொள்வது அவசரமான வாழ்க்கையில் ஆசுவாசம் தருவது மட்டுமில்லாமல், இயற்கையுடனான நமது பிணைப்பை மீட்டெடுக்கவும் பெருமளவு உதவும். வாழ்வில் எதிர்கொள்ளும் அனைத்துச் சவால்களையும் நீங்கள் சாதனைகளாக மாற்றி பல வெற்றிகளைக் குவிக்க சேலம் பறவையியல் கழகம் தன் நெஞ்சார்ந்த வாழ்த்துகளை அனைவருக்கும் உரித்தாக்குகிறது.

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்! 

குறிப்பு: தி இந்து நாளிதழின் உயிர் மூச்சுப் பகுதியில் டிசம்பர் 29, 2018 அன்று “புத்தாண்டில் நீங்களும் பட்சிராஜன் ஆகலாம்” என்ற தலைப்பில் வெளியானக் கட்டுரையின் முழு வடிவம். எழுத்து: சு.வே. கணேஷ்வர், சேலம் பறவையியல் கழகம்.